4 ஆண்டுக்கு பின் சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய பெண் நீதிபதி

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைக் கொண்டிருப்பவர் பாத்திமா பீவி. இவர் தமிழகத்தில் ஆளுநராகவும் இருந்தவர்.
அதன் பின்னர் சுஜாதா மனோகர், ரூமா பால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பதவியை வகித்த பெண்கள் ஆவர். இத்தனை பேர் தான் இவ்வளவு காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் அமர்ந்த பெண்கள் ஆவர்.
இவர்களில் கடைசியாக ஓய்வு பெற்றவர் ரூமா பால். கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பெண் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது புதிய பெண் நீதிபதியாக கியான் சுதா மிஸ்ராவின் பெயரை உச்சநீதிமன்ற காலேஜியம் மத்திய சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
கியான் சுதா மிஸ்ரா ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது உள்ளார்.
இதேபோல சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவின் பெயரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்து காலேஜியம் சட்ட அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயரும். மொத்த இடங்கள் 31. எனவே மேலும் 2 இடங்கள் காலியாக இருக்கும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின்போது பெண்களுக்கு முன்னுரிமை தரப்படாதது குறித்து சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்தே தற்போது பெண் நீதிபதி ஒருவரை உச்சநீதிமன்ற காலேஜியம் பரிந்துரைத்திருப்பதாக தெரிகிறது.
கியான் சுதா மிஸ்ரா பீகாரைச் சேர்ந்தவர். பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications