ஆம்னி பஸ்சில் துப்பாக்கி கடத்திய வழக்கில் கைதான அட்டாக் பாண்டிக்கு முன் ஜாமீன்
மதுரை: சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு ஆம்னி பஸ்சில் துப்பாக்கிகள் கடத்தப்பட்டு வந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி அட்டாக் பாண்டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் அளித்துள்ளது.
கடந்த பி்ப்ரவரி மாதம் 24ம் தேதி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் இரண்டு கள்ளத் துப்பாக்கிகள், நான்கு ரவுண்டு துப்பாக்கித் தோட்டாக்கள், 27 புல்லட்கள் இருந்தன.
இதுகுறித்து நடந்த விசாரணையில், சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பஸ் மூலம் இவற்றை தங்களுக்கு அனுப்பியதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டியையும் போலீஸார் சேர்த்தனர். இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ், முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மேலும், அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம். மதுரையில் தங்கியிருந்து நான்கு வாரங்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் எனவும் பாண்டிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டு, 3 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் அட்டாக் பாண்டி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications