ஹெட்லியை விசாரிக்கச் செல்லும் குழுவில் மாஜிஸ்திரேட்டும் இடம் பெறுவார்
டெல்லி: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தனது பங்கை ஒப்புக் கொண்டுள்ள லஷ்கர் இ தொய்பாவின் ஏஜென்ட் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரித்து அவனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இந்திய அரசு ஒரு மாஜிஸ்திரேட்டை நியமிக்க முடிவு செய்துள்ளது. இவர் அமெரிக்கா சென்று ஹெட்லியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டு வரவுள்ளார்.
ஹெட்லியை விசாரிக்க அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்த வாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு முறைப்படி கடிதம் அனுப்பவுள்ளது. அனுமதி கிடைத்ததும் இந்த மாஜிஸ்திரேட் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இவர் ஹெட்லியை சந்தித்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164ன் கீழ் ஹெட்லியின் வாக்குமூலத்தைப் பெற்றுப் பதிவு செய்து கொள்வார். இதுபோன்ற வாக்குமூலம் இந்திய கோர்ட்களில் செல்லுபடியாகும் என்பதால் மாஜிஸ்திரேட்டை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
மேலும், மும்பை தனி கோர்ட்டில் ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்போது இந்த வாக்குமூலம் முக்கிய ஆவணாக விளங்கும்.
இந்தியாவால் அனுப்பப்படும் குழுவில், மாஜிஸ்திரேட் தவிர வக்கீல்கள், மும்பை காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பார்கள்.
ஹெட்லியை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று முடிவாகி விட்ட நிலையில், ஹெட்லியிடம் நேரடியாக விசாரிக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இந்த விசாரணையின்போதே மாஜிஸ்திரேட் மூலம் அதை வாக்குமூலமாக பதிவு செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஹெட்லியை விசாரித்து முடித்த பின்னரே குற்றப்பத்திரிக்கையாத் தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications