கள் இறக்க அனுமதி கோரி சிறை நிரப்பும் போராட்டம் - கொமுக அறிவிப்பு
கோவை: கள் இறக்க அனுமதி கோரி மே 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் கொமுக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட மாநகர் தலைமை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் நாகராஜ் பேசுகையில், 'விவசாயிகளின் நலனுக்காக கள் இறக்க அனுமதி கேட்டு, கொமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் அரசு இது குறித்து கண்டுகொள்ளவில்லை.
கொங்கு மண்டலத்தில், ஒரு கோடியே 80 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன.
இதை தவிர பனை மரங்களும் ஏராளமாக உள்ளன. இதை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு விட்டு, டாஸ்மாக் மது வருமானத்தில் மட்டும் அரசு குறியாக உள்ளது.
கள் இறக்குவது குறித்து முன்னாள் நீதிபதி சிவசுப்ரமணியம் கமிட்டி அமைத்து தீர்வு காண்பதாக தமிழக அரசு உறுதி அளித்தது. அதனால் தான் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.
இதுவரை கமிட்டியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அரசும் எந்த பதிலும் தரவில்லை. இதனால் நாங்கள் எங்களது அடுத்த கட்ட போராட்டத்தை வலுப்படுத்த உள்ளோம்.
எனவே, மே 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications