தமிழகம் முழுக்க 2 மணிநேர மின்வெட்டு இருப்பது உண்மையே! - மின்வாரியம்
சென்னை: மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு இருப்பது உண்மைதான் என்று மின் வாரியத் தலைவர் சி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி. சிங் கூறியதாவது:
தேவையைக் கருத்தில் கொண்டு, மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு, 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்படுவது உண்மைதான்.
இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு, கோடை காலத்தில் உயர்த்தப்படாது. இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும். மே 15-ம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதன்பிறகு மின் பற்றாக்குறை ஓரளவு குறையும்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக, டபிள்யு.டபிள்யு.எப் இந்தியா என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (மார்ச் 27) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் தேவையற்ற விளக்குகளை அணைத்து, ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்," என்றார்.
வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்
இந்த சந்திப்பில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பேசியது:
"தேசிய வன கொள்கையின் படி நிலப் பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம், கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது. இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு, வனப் பகுதியாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, 2010 -11 நிதியாண்டில் ரூ. 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications