தமிழகத்தில் 4500 கோயில்களில் ரூ. 400 கோடியில் கும்பாபிஷேகம்
தென்காசி: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 4500 கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணி நடந்துள்ளது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் கூறினார்.
குற்றாலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றாலம் சித்திர சபையில் உள்ள ஓவியங்களுக்கு மூலிகை வர்ணம் தீட்டும் பணி நடைபெறவுள்ளது. இந்த பணிகள் துவங்கியதும் சித்திரசபையை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படும்.
குற்றாலநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 22ம் தேதி நடத்தப்படும். குற்றாநாதர் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளில் ஆண்டுக்கு 15 சதவீத வாடகை உயர்த்தப்படும். இது 2011ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்கு வியாபாரிகளும் ஓப்புக்கொண்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 16 கோயி்ல்களில் ரூ.4 கோடியோ 60 லட்சம் செலவில் திருப்பணி நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய் செலவில் 1100 கோயில்களில் திருப்பணி நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் செலவில் 4500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
பண்பொழி திருமலை கோயிலில் 4 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது முழுவதும் நன்கொடையாளர் மூலம் நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications