காலாவதி மருந்து விற்பனை மோசடி - இதுவரை 10 பேர் கைது - ரூ. 5.5 கோடி மருந்துகள் பறிமுதல்
சென்னை: காலாவதியான மருந்துகளை விற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைதாகியுள்ளதாகவும், ரூ. 5.5 கோடி மதிப்பிலான காலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காலாவதி மருந்து விற்பனை வழக்கு தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளோம். 4 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இதற்காக 13 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த வழக்குக்கென்றே தனியாக பணியாற்றுகின்றனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்ய வேண்டியதுள்ளது. அதற்கு இன்னும் அவகாசம் தேவை. இதுவரை ரூ.5.50 கோடி அளவுக்கு மருந்துகளை கைப்பற்றி இருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
சென்னையை பாதுகாப்பதற்கு நாங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கூடுதலாக பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது, மக்கள் கூடும் பகுதிகளாக விளங்கும் ஆஸ்பத்திரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தீ தடுப்பு சாதனங்கள், எலக்ட்ரானிக் அலாரம், கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் கட்டாயம் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.
பாதுகாப்பு விவகாரத்தில் பெரிய நிறுவனங்களுக்கென்று 15 பேரைக் கொண்ட தனிக் குழுக்களையும், சிறு வணிகர்களுக்கான தனி குழுக்களையும் உருவாக்க இருக்கிறோம். இவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள் என்றார் ராஜேந்திரன்.