பென்னாகரத்தில் 84 சதவீத வாக்குப் பதிவு - நரேஷ் குப்தா

நேற்று பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் இரவில் செய்தியாளர்களை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்தார் நரேஷ்குப்தா.
அப்போது அவர் கூறுகையில்,
பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல் 10 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட காத்து இருந்தனர். அவர்களுக்கு டோக்கன்' கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 84 சதவீதம் ஓட்டுப்பதிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ளஓட்டுகள் போடுதல் ஆகியவற்றை தடுப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு லேப்-டாப், 2 வெப் காமிராக்கள் அமைத்து நேரடியாக கண்காணித்து வந்தோம்.
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், இலவச பொருட்கள் கொடுத்தல் தொடர்பாக எனக்கும், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மேச்சேரி வழியாக அரசியல் கட்சியினர் சிலர் பென்னாகரம் தொகுதிக்குள் நுழைந்து வாக்காளர்களுக்கு பணம் தருவதாக சில தகவல்கள் கிடைத்தன. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த வெளியாட்களை வெளியேற்றினார்கள்.
இந்த இடைத்தேர்தலில் வழக்கமானதை விட அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிகபட்சமாக ஏரிமலை வாக்குச்சாவடியில் 93 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமான வாக்குப்பதிவு பற்றி தற்போது உடனே சொல்ல முடியாது.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளில் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
பென்னாகரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 30-ந்தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் நரேஷ்குப்தா.
பேட்டியின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா, மாவட்ட வருவாய் அதிகாரி மகேஷ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாக்குப் பெட்டிகளுக்குப் பலத்த பாதுகாப்பு
நேற்றைய தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவு முடிவடைந்ததும் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு ஸ்டிராங் ரூமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறை பூட்டி சீலிடப்பட்டது.
அறைக்கு வெளியிலும் கல்லூரி வளாகத்திலும் தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
250 வாக்குச் சாவடிகளிலும் தலா 2 இயந்திரங்கள் என மொத்தம் 500 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
30ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நண்பகலுக்குள் முடிவு தெரிய வரும்.
பென்னாகரம் தேர்தலில் தி.மு.க. சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க .சார்பில் அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்குமரன், தே.மு.தி.க. சார்பில் காவேரிவர்மன் உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications