முதன்மை விவசாயப் பேச்சாளராக அமெரிக்க இந்தியரைத் தேர்வு செய்த ஒபாமா

இந்தப் பதவிக்குரியவரை தேர்வு செய்வது தொடர்பாக செனட் சபை தாமதம் செய்து வந்தது. பல மாதங்களாக செனட் நியமனத்தை அறிவிக்கும் என்று எதிராபார்த்துக் காத்திருந்த ஒபாமா அதிரடியாக அவரே நியமனத்தை அறிவித்து விட்டார்.
உ.பி. மாநிலம் பந்த் நகரில் உள்ள உ.பி. விவசாயப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ் படித்தவர் இஸ்லாம் சித்திக்கி. இவர் உள்பட 15 பேரை தற்போது நியமனம் செய்து அறிவித்துள்ளார் ஒபாமா. இந்த 15 பேரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பார். முதன்மைப் பேச்சாளராக சித்திக்கி செயல்படுவார்.
இவர்களின் நியமனத்திற்கு குடியரசுக் கட்சியினர்தான் முட்டுக்கட்டை போட்டு வந்ததாகவும் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். சுயநல அரசியல் லாபத்திற்காக இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரிவினைவாத அரசியலை என்னால் அனுமதிக்க முடியாது. அரசின் அடிப்படை செயல்பாட்டுக்குக் குறுக்கே நிற்க யாரையும் அனுமதிக்க முடியாது.
எனது நியமனத்தை ஏற்பதும், ஏற்காமல் நிராகரிப்பதும் செனட்டின் பொறுப்பாகும். ஆனால் அந்தப் பொறுப்பை சுய நலத்திற்காக தட்டிக் கழித்து வந்தனர் குடியரசுக் கட்சியினர். எனவே அமெரிக்க மக்களின் நலனைக் ருத்தில் கொண்டு எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நியமனத்தை அறிவிக்கிறேன்.
நான் அறிவித்துள்ள 15 பேரில் பெரும்பாலானவர்களின் பெயர்களை செனட் கமிட்டி பல மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் தந்து விட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
சித்திக்கி தற்போது கிராப்லைப் அமெரிக்காவில், அறிவியல் மற்றும் முறைப்படுத்தல் விவகாரப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். முன்பு அதே அமைப்பின் விவசாய உயிரித் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவராக அவர் இருந்துள்ளார். கடந்த 1997 முதல் 2001 வரை பில் கிளிண்டன் அரசில் அமெரிக்க விவசாயத் துறையில், பல்வேறு பொறுப்புகளை சித்திக்கி வகித்துள்ளார்.
2004ம் ஆண்டு முதல் அமெரிக்க வர்த்தக் துறையிலும் பணியாற்றி வந்தார். அமெரிக்க விவசாயத் துறையில் சேருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளை கலிபோர்னியா உணவு மற்றும் விவசாயத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் சித்திக்கி.












Click it and Unblock the Notifications