பென்னாகரம்-நாளை வாக்கு எண்ணிக்கை: 2ம் இடம் யாருக்கு?
தர்மபுரி: பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இத் தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது.
திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொகுதியில் உள்ள 2,01,008 வாக்காளர்களில், 84.95 சதவீதம் பேர் வாக்களித்தனர்.இதில் 335 பேர் தபால் மூலம் வாக்களித்தனர்.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு எயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றி 34 ஆயுதம் தாங்கிய போலீஸார் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 250 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணிக்கை நாளை (30ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கும். பகல் 12 மணிக்குள் தேர்தல் முடிவு தெரிந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இத்தொகுதியில் 2வது இடத்தை பெறுவது அதிமுகவா அல்லது பாமகவா என்பது தான் பரபரப்பாக உள்ளது.
பிரச்சாரத்தின்போது நாம் தோற்றாலும் பரவாயில்லை, அதிமுக தான் வெல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் பாமக வென்றுவிடக் கூடாது என்பது தான் திமுகவின் எண்ணமாக இருந்தது.
அதே போல அதிமுக தரப்பிலும் நாம் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, பாமக எக் காரணம் கொண்டும் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடக் கூடாது. அந்த இடத்தை நாம் தான் பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினர்.
பாமகவோ தங்களது அரசியல் எதிர்காலமே இந்தத் தொகுதியி்ன் தேர்தல் முடிவில் தான் உள்ளது என்பதை உணர்ந்து தீவிரமாக பிரச்சாரம் செய்தது. காதணி, பணம் என்று ஆளும் கட்சிக்கு போட்டியாக தொகுதியில் வினியோகம் செய்தது.
வன்னியர்கள் நிறைந்த இத் தொகுதியில் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்காவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவோ, அதிமுகவோ யாரும் மதிக்க மாட்டார்கள், தனித்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம், அரசியலில் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே போய்விடுவோம் என்று பாமக தரப்பு கருதுகிறது.
வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருந்ததால் இரண்டாம் இடத்துக்கு பாமக தீவிரமாக முயன்றது.
அதிமுகவுக்கோ இது மாபெரும் கெளரவப் பிரச்சனையாகிவிட்டது. மாநிலத்தின் பிரதான எதிர்க் கட்சி மூன்றாவது இடத்துக்கத் தள்ளப்பட்டால் அது வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும், கட்சிக்கு மக்களிடத்தில் உள்ள மரியாதை மேலும் பெருமளவில் சரிந்துவிடும் என்ற அச்சத்தில் உள்ளார் ஜெயலலிதா. இதனால் அதிமுகவும் இரண்டாவது இடத்துக்கே குறி வைத்து பிரச்சாரம் செய்தது.
இதற்காக மற்ற இடைத் தேர்தல்களில் செலவிடாத அளவுக்கு இந்த இடைத் தேர்தலில் அதிமுகவும் பணத்தை இறக்கிவிட்டது.
விஜய்காந்துக்கோ டெபாசிட் கவலை. வெறும் வாய் சவடாலை வைத்தே இதுவரை பிழைப்பு நடத்திவிட்ட விஜய்காந்துக்கு தேமுதிக இந்தத் தேர்தலிலும் டெபாசிட் இழந்தால், கட்சி கந்தலாகிவிடும் நிலை.
இதனால் டெபாசிட் வாங்க குறைந்தபட்சம் எத்தனை ஓட்டுக்கள் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு கடைசி நேரத்தில் ஓட்டுக்கு ரூ. 1000 வீதம் 15,000 பேருக்கு தேமுதிக கரன்சி பட்டுவாடா செய்ததாக மற்ற கட்சியினர் கூறுகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கை விவரத்தை நாளை காலை 8 மணி முதல் தட்ஸ்தமிழில் காணலாம்.












Click it and Unblock the Notifications