சென்னை அருகே ஏரியில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்
சென்னை: சென்னை அருகே புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுக் கிடந்ததை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள், மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர். இதையடுத்து காலாவதியான மருந்து மாத்திரைகளை மருந்துக் கடைக்காரர்களும், மருந்து நிறுவனத்தினரும் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்று ஏராளமான கொட்டப்பட்ட மருந்து, மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புழுதிவாக்கம் ஷீலா நகரில் உள்ள ஏரியில்,
இன்று காலை 3 மூட்டைகளில் காலாவதி மருந்துகள் கொட்டப்பட்டு கிடந்தன. ஏரிக்கரையில் உள்ள புதர்களில் இவை கிடந்தன.
இதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினார்கள்.
இந்த மருந்துகள் அனைத்தும் 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் காலாவதியான மாத்திரைகள், பாட்டில் மருந்துகள் ஆகும். பெரும்பாலானவை குழந்தைகள் பயன்படுத்தும் மருந்துகளாகும். இரவோடு இரவாக சிலர் இதை இங்கு கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
கொட்டியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications