பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்கு - போலீஸ் எச்சரிக்கை
நெல்லை: போலீஸ், வக்கீல், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்குரியவர்களைத் தவிர வேறு யார் ஓட்டி வந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பத்திரிக்கை துறையில் சுமார் ஆயிரம் பேரும், போலீஸ் துறையில் சுமார் 2 ஆயிரம் பேரும், வக்கீல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களது வாகனங்களில் போலீஸ், பிரஸ், வக்கீல் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த வாகனங்களை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது குடும்பத்தினர், நண்பர்கள், என அனைவரும் ஓட்டி செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பணிக்கு சம்பந்தமே இல்லாதவர்களும் தங்களது வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர்.
போலீசார் வாகன சோதனையின் போது இந்த வாகனங்களை சோதனை செய்ய முடியவில்லை. சிலர் தங்களது வாகனத்தை விற்கும்போது, அதை வாங்கும் நபர் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் சம்பந்தப்பட்ட துறையில் யார் வேலை செய்கிறார்கள் என தெரியாமல் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக எஸ்பி ஆஸ்ரா கர்க் அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பிரஸ், போலீஸ், வக்கீல் ஸ்டிக்கர்களுடன் நகரில் உலா வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்த துறையில் வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications