சென்னை சூப்பர் கிங்ஸை 17 ரன் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்
அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு போதாத காலம் தொடருகிறது. நேற்றைய போட்டியில் கடுமையாகப் போராடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இது சென்னை அணிக்கு தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இதுவரை 7 போட்டிகளில் மோதி ஐந்து போட்டிகளில் தோல்வி கண்டு, 2ல் மட்டுமே அது வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியின் வெற்றிக் கனவில் வெந்நீர் ஊற்றிய பெருமை ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் நமன் ஓஜா மற்றும் அந்த அணியின் பந்து வீச்சாளர்களையே சாரும்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 177 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஓஜா 49 பந்துகளைச் சந்தித்து 80 ரன்களைக் குவித்தார். இதேபோல தொடக்க ஆட்டக்காரர் லம்ப் 16 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார். வோக்ஸ் தன் பங்குக்கு 20 ரன்கள் சேர்த்தார்.
நேற்று ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் பெரிய அளவை எட்ட முக்கியக் காரணம் ஓஜாதான்.
20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து முடித்தது ராஜஸ்தான்.
பின்னர் ஆட வந்த சென்னை அணிக்கு முரளி விஜய் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அவருக்குத்தான் சரியான துணை அமையவில்லை. அவரே கூட துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிப் போனார். 28 பந்துகளைச் சந்தித்த முரளி 42 ரன்களை எடுத்தார்.
மாத்யூ ஹெய்டன் நல்ல ஸ்கோரை எட்ட எத்தனித்தபோது 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து யூசுப் பதான் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 14 ரன்களில் அவுட் ஆக, கேப்டன் டோணி 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
பிறகு ஜோடி சேர்ந்த பத்ரிநாத்தும், அல்பி மார்க்கலும் அடித்து ஆடினர். இதனால் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. குறிப்பாக மார்க்கல் விளாசித்தள்ளினார். 12 பந்துகளைச் சந்தித்த மார்க்கல் 28 ரன்களைக் குவித்தார்.
அதில், ஷான் வார்னே பந்து வீச்சில் அடுத்தடுத்து விளாசிய 3 அபாரமான சிக்சர்கள் அடக்கம். மார்க்கல் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
மறுபக்கம் பத்ரிநாத் சிக்சர் அடிக்கப் போய் பதானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 25.
வெற்றிக்கான இலக்கு அதிகம் இருந்த நிலையிலும் கூட முட்டி மோதிப் பார்த்த சென்னை அணி கடைசி நேரத்தில் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதால் 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஆட்ட நாயகனாக ஓஜா தேர்வானார்.












Click it and Unblock the Notifications