தமிழகத்தில் இனி 3 மணி நேரம் மின்வெட்டு!
சென்னை: முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவும், மின் பற்றாக்குறையாலும் தமிழகத்தில் மின் வெட்டு நேரத்தை அதிகரித்துள்ளது மின்சார வாரியம்.
இனி சென்னையைத் தவிர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளுக்கு தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தினசரி இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட இந்த நிலையே நீடிக்கிறது.
கிராமப்புறங்களில் விவசாய பம்ப்செட்டுகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மட்டுமே இனி மின் விநியோகம் செய்யப்படும். கடலூர், வேலூர், தர்மபுரி விவசாய பம்ப்செட்டுகளுக்கான மின்சாரம் கடந்த இரண்டு தினங்களாக 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு அதிகபட்சம் 11 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. மின் உற்பத்தியோ 8 ஆயிரம் மெகா வாட்டாகவே உள்ளது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 3000 மெகாவாட் மின்சாரத்தை அட்ஜஸ்ட் செய்ய, 'கோடை மழை'க் காலம் வரை மின்வெட்டை கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மேட்டூர், வடசென்னை, நெய்வேலி அனல் மின் நிலையப் பிரிவுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பருவக்காற்று மந்தமாக உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேடடூர் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட்டில் பழுது ஏற்பட்டதை அடுத்து மேட்டூரில் மின் உற்பத்தி 840 மெகா வாட்டிலிருந்து 630 மெகா வாட்டாகக் குறைந்தது. இதேபோன்று வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் பழுதடைந்துள்ளது.
நெய்வேலியில் மூன்று யூனிட்டுகள் பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் மின் தடை நேரத்தை மூன்று மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. சில மாவட்டங்களில் இது ஞாயிற்றுக்கிழமையே அமலுக்கு வந்துவிட்டது.
வெளியில் மின்சாரத்தை வாங்கி விநியோகிக்கும் நிலையில் மின்சார வாரியம் இல்லாததால் இந்த கோடையை கடும் மின்வெட்டுடன்தான் மக்கள் கழித்தாக வேண்டும்.












Click it and Unblock the Notifications