உண்டியல் மேல் உண்டியல் வைத்து மோசடி - எஸ்பி அதிரடி நடவடிக்கை
நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவின் போது மறுகால்தலை கோவிலில் உண்டியல் மேல் உண்டியல் வைத்து பணம் சுருட்டப்பட்டதை கண்டுபிடித்த எஸ்பி ஆஸ்ரா கர்க் தனது அதிரடி உத்தரவால் தடுத்து நிறுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குலதெய்வ கோயில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சீவலப்பேரி அருகே மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோயில், சித்தர் மகாராஜா கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். மறுகால்தலையில் மட்டும் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நெல்லையில் இருந்து இக்கோயில்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தனியாரிடமிருந்து பூலுடையார் சாஸ்தா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதை அடுத்து தற்போது அதனை அறநிலையதுறை ஏற்றுக் கொண்டுள்ளது. பங்குனி உத்திர நாளில் மட்டும் இக்கோயில்களில் 20 லட்ச ரூபாய் வரை காணிக்கை வசூலாகும் என்று தெரிகிறது.
ஆனால் இந்த பணத்தை சிலர் கையாடல் செய்து வருவதாக புகார் வந்தது. அங்குள்ள பூலுடையார் சாஸ்தா, பேச்சியம்மன், கொம்பு மாடசாமி ஆகியவை முன்பு அறநிலையத்துறை சார்பில் தனிதனி உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலர் இந்த உண்டியலை காவி துணியில் மறைத்து அதன் மேல் குடத்தினால் செய்யப்பட்ட உண்டியலை வைத்து விடுகின்றனர்.
பக்தர்கள் இதனை கோயில் உண்டியல் என நினைத்து காணிக்கை செலுத்துகின்றனர். குடம் நிறைந்ததும் அதனை எடுத்து விட்டு வேறு குடம் வைக்கின்றனர். இவ்வாறு ஓரே நாளில் மட்டும் 20 லட்சம் வரை பணம் அபேஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உண்டியல் பணம் சுரண்டப்படுவதை அறிந்த எஸ்பி ஆஸ்ரா கர்க் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தாழையூத்து டிஎஸ்பி ராஜராஜன் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு தனிநபர் வைத்திருந்த உண்டியலையும் அகற்றினர். எஸ்பியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.
இதன் மூலம் அரசுக்கு பலலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த மோசடிக்கு தற்போது முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications