3 மணி நேர மின்வெட்டு-பாமக, மதிமுக, பாமக கடும் கண்டனம்
செனனை: தமிழகத்தில் சென்னை நகரம் தவிர்த்து பிற பகுதிகளில் 3 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ன் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்தடை பல மணி நேரத்திற்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், விசைத்தறி நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாவட்டங்களில் 2 மணி நேர மின்தடைக்கு பதிலாக 3 மணி நேர மின்தடையை நடைமுறைப்படுத்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது.
ஏற்கனவே கிராமப் பகுதிகளில் 2 மணி நேரம் என்பது 4 முதல் 6 மணி நேர மின் தடையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் அதிகாரப்பூர்வமாக 3 மணி நேரம் மின்தடை என்று அறிவித்தால், குறைந்த பட்சம் 8 மணிநேரம் என்ற அளவில் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
மின்தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்கியிருக்க வேண்டும். மின்வாரியம் சொந்தமாக கூடுதல் மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியாருக்கு அனுமதி வழங்கி நிலங்களை தாரைவார்ப்பதில் காட்டிய ஆர்வத்தை, மின்வாரியம் சொந்தமாக கூடுதல் மின் உற்பத்தியை பெருக்குவதில் காட்டவில்லை.
இதனால் கடந்த 3 ஆண்டுகளில் மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் பெரும் இடைவெளி இருந்து வந்திருக்கிறது. 2007-08-ல் 800 கோடி iனிட் என்ற அளவில் இருந்த இடைவெளி, 2009-10-ல் இரண்டு மடங்காக சுமார் 1550 கோடி iனிட் என்ற அளவில் அதிகரித்திருக்கிறது. 2010-11-ல் இது மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
மின்தடை நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க முடிவெடுத்திருந்தால், அதனை கைவிடுமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும். நடைமுறையில் இருக்கும் 2 மணி நேர மின்தடையையும் ரத்து செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை தேவை-பாஜக:
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வாலும், வருவாய் பற்றாக்குறையாலும் அவதிப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு சோதனையாக இந்த மின்வெட்டு உள்ளது. மின்வெட்டின் உண்மையான காரணங்கள், மின்வெட்டை சமாளிப்பதற்காக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
7ம் தேதி ஆர்ப்பாட்டம்-மதிமுக:
மின்வெட்டை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 7-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 10 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரத்து 500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. அரசின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.
மின்வெட்டு முன்பு போல இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் 3 மணி நேரம் மின்வினியோகம் இருக்காது என்று அரசே அறிவித்துள்ளது. விவசாயத்துக்கு 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயத்துக்கு பம்புசெட் இயக்க முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வினியோகிக்க முடியவில்லை. தொழிற்சாலைகள் இயங்க முடியவில்லை. தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை.
எனவே, இதை கண்டித்து ஏப்ரல் 7-ந் தேதி தமிழகம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் 4 தவணையாக வழங்கப்படுவதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையின்றி மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை கண்டு மக்கள் கோபமடைந்துள்ளனர்.
விவசாயத்திற்கு தொடர்ந்து 12 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வற்புறுத்தி போராட்டங்கள் நடத்த மாவட்ட அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications