பெண்களை வசியப்படுத்தும் புத்தகம்-அடித்துக் கொண்ட சாமியார்கள்!
தர்மபுரி: பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்ற புத்தகத்தைப் படிக்க வாங்கிய சாமியார் அதைத் திருப்பித் தரவில்லையாம். இதையடுத்து அவருக்கும், புத்தகத்தை வாடகைக்கு விட்ட சாமியாருக்கும் இடையே அடிதடியாகி ஒருவர் காயமடைந்து, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு சாமியாராம். முன்பு திருவண்ணாமலையில் உள்ள சிவானந்தா மடத்தில் தங்கியிருந்தார். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடித்ததாகவும் சர்ச்சையாகி பொதுமக்களால் தர்ம அடி கொடுத்து விரட்டப்பட்டார்.
கஞ்சா வழக்கு ஒன்றும் இவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளதாம். திருவண்ணாமலையில் தனக்கு முக்தி கிடைக்காததால், அங்கிருந்து தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலைக்கு ஷிப்ட் ஆகி வந்தார். அங்கு மணிகண்டன் என்பவருடன் (இவரும் சாமியாராம்) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே இடத்தில் டேரா போட்டு ஆண்டவன் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த நிலையில் மணிகண்டன் சாமியார் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்த முருகனுக்கு அதில் ஆர்வம் வந்தது. மணிகண்டன் வைத்திருந்த புத்தகம், பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்பது குறித்த டிப்ஸ்கள் இடம் பெற்ற புத்தகமாகும்.
அதை வாங்கிப் படித்த முருகன், திருப்பித் தரவில்லையாம். ஓசியில் படிக்கக் கொடுத்தால் திருப்பித் தருவதில்லையா என்று கேட்டு முருகனிடம் சண்டை பிடித்துள்ளார் மணிகண்டன். இதுதொடர்பாக இருவருக்கும் அடிதடியாகி கட்டிப் புரண்டு சண்டை போட்டனராம்.
புத்தகத்தை திருப்பி தர மறுத்த தன்னை மணிகண்டன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பலமாக தாக்கியதாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications