மும்பை தீவிரவாதத் தாக்குதல்: கசாப் மீதான வழக்கின் விசாரணை முடிந்தது-மே 3ல் தீர்ப்பு

மும்பை, ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்ட தனி கோர்ட்டில், பலத்த பாதுகாப்புடன் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று அரசுத் தரப்பு மற்றும் கசாப் தரப்பு வக்கீல்களின் இறுதி வாதங்கள் நடந்தன.
அதன் பின்னர் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தஹிளியானி அறிவித்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 653 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக உஜ்வால் நிகாம் ஆஜராகினார். கசாப் தரப்பில் பல வக்கீல்கள் நியமிக்கப்பட்டு நீக்கப்பட்டு வந்தனர். கடைசியாக வாதாடியவர் கே.பி.பவார்.
வழக்கு குறித்து உஜ்வால் நிகாம் கூறுகையில், ஒட்டுமொத்த வழக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றார்.
பவார் கூறுகையில், முடிந்த வரை சிறப்பான முறையில் வாதாடி கசாப் தரப்பு நியாயத்தை நீதிபதி முன் எடுத்து வைத்துள்ளேன். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பதிவான வீடியோ காட்சியில் இருப்பது கசாப் அல்ல என்றும் எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட கசாப்பின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்டுள்ளன என்றார்.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மொத்தம் 10 தீவிரவாதிகள் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். இவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்ட்டு விட்டனர்.
மும்பையின் பல முக்கியப் பகுதிகளை குறி வைத்து தீவிரவாதிகள் 3 நாட்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் வெளிநாட்டினர் ஆவர். இதை உலகமே டிவிகள் மூலம் நேரடியாக பார்த்து அதிர்ந்தது என்பது நினைவிருக்கலாம்.
விசாரணையின்போது கசாப் தனது வாக்குமூலங்களை மூன்று முறை மாற்றிக் கூறினான். சினிமாவில் நடிக்க வந்தேன் என்று ஒருமுறை கூறினான். இவ்வாறு மாறி மாறி புதுப் புதுப் கதைகளை விட்டான்.
2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அவன் அளித்த வாக்குமூலத்தின்போது, நான் சம்பவம் நடந்த அன்று கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்குதலுக்கு 20 நாட்களுக்கு முன்பே என்னைக் கைது செய்தனர் என்று கூறினான்.












Click it and Unblock the Notifications