ஐயோ, பாவம் சென்னை சூப்பர் கிங்ஸ்!-டிக்கெட்களை திருப்பி கொடுக்கும் ரசிகர்கள்

முதலில் ஆடிய 7 போட்டிகளில் ஐந்து தோல்விகளுடன் சென்னை அணி பெரும் நெருக்கடியில் உள்ளது. அடுத்து நடைபெறவுள்ள 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் அது கண்டிப்பாக வென்றாக வேண்டும். அப்போதுதான் அரை இறுதிப் போட்டி குறித்து நினைத்துப் பார்க்க முடியும்.
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியை சந்திக்கிறது சென்னை.
சென்னை அணியின் தொடர் தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் போட்டியைப் பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் குறைந்து வருகிறதாம்.
இதனால் இன்று நடைபெறும் போட்டியைப் பார்க்க வாங்கியிருந்த டிக்கெட்களை வந்த விலைக்கு விற்று விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்களாம்.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ரசிகர்களின் இந்த வெறுப்புக்கு முக்கியக் காரணம் உள்ளது. உள்ளூரான சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2 போட்டியிலும் சென்னை சூப்பர்கிங்ஸ் தோற்றது. இதனால் அவர்கள் பெரும் கடுப்பாகியுள்ளனர்.
சொந்த மைதானத்திலேயே இப்படி சொதப்புகிறார்களே என்ற கோபம் ஒருபக்கம், இவர்கள் ஆடுவதைப் பார்க்க கொள்ளை கொள்ளையாக பணத்தை இழக்க வேண்டுமா என்ற எரிச்சல் மறுபக்கம். இதனால்தான் டிக்கெட்களைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனராம்.
பெங்களூர் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டம் மற்றும் ஏப்ரல் 6-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டை திருப்பி கொடுத்துள்ளனர். 1,500-க்கு வாங்கிய டிக்கெட்டை 1000-க்கு விற்றுவருகிறார்களாம்
இந்த இக்கட்டான நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பெங்களூர் அணி 6 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் வென்று திடமான நிலயில் உள்ளது. ஏற்கனவே சென்னையுடன் நடந்த மோதலில் பெங்களூர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான மாத்யூஹெய்டன், முரளி விஜய் ஆகியோர் அதிரடியாக ஆடி வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல டோணி, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என முன்னணி வீரர்களும் சிறப்பாக ஆடியாக வேண்டும். பந்து வீச்சில் முரளிதரன் தொடர்ந்து சிறப்பாக வீசி வருகிறார். அதேசமயம், மற்ற பந்து வீச்சாளர்களும் அசத்தினால்தான் உண்டு.
பெங்களூர் அணியில் கல்லிஸ், ஸ்டெயின், உத்தப்பா ஆகியோர் அசத்தி வருகின்றனர். கூடவே தற்போது கெவின் பீட்டர்சனும் அணியில் இணைந்துள்ளதால் பெங்களூர் கூடுதல் பலம் பெற்றுள்ளது.
இன்றையப் போட்டி உள்ளூரில் நடப்பதால் சென்னை வெற்றிக்குப் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications