தேர்தலில் அதிமுக டெபாசிட் இழப்பது இது 4வது முறை
சென்னை: அதிமுக டெபாசிட் இழப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் 3 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் இப்போதுதான் முதல் முறையாக அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழந்து, 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது. திமுக கடந்த 2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தலில் அதிமுக தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக டெபாசிட்டைப் பறி கொடுத்ததோடு, 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
இருப்பினும் தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக டெபாசிட்டைப் பறி கொடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2006 பொதுத் தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத் தொகுதிகளில்தான் இந்த அவலம் நேர்ந்தது. திருவட்டாரில் திலக் குமாரும், விளவங்கோட்டில் பிராங்க்ளினும், கிள்ளியூரில் டாக்டர் குமாரதாசும் அதிமுக சார்பில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்கள் ஆவர்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, கிராமப்புற மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஒரே கட்சியாக அவரது காலத்தில் வெற்றி நடை போட்டு வந்தது. குறிப்பாக இரட்டை இலைச் சின்னம் கிராமப்புற மக்களின் மனதோடு கலந்து போயிருந்த ஒரு கலாச்சாரமாகவே விளங்கி வந்தது. ஆனால் முதல் முறையாக அதிமுகவின் நிலையை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டார் அதிமுகவின் தற்போதைய தலைவியான ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications