ஏர் இந்தியாவைக் காப்பாற்ற ரூ 1200 கோடி நிதி
மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். கிட்டத்தட்ட ரூ 5000 கோடிக்கு மேல் நஷ்டம் கண்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர பெரும் நிதி தேவைப்படுகிறது ஏர் இந்தியாவுக்கு.
சமீபத்தில் பட்ஜெட்டில் ஏர் இந்தியாவுக்கு ரூ 500 கோடி வரை மென் கடன்கள் வழங்குவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் மேலும் 1200 கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது மத்திய அமைச்சரவை. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "ஏர் இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே அடுத்த மாதம் கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஏர் இந்தியா குறித்த சில கடுமையான முடிவுகளை அமைச்சரவை மேற்கொள்ளவிருக்கிறது. இதில் செலவுக் கட்டுப்பாடு, வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள விமானங்களை திரும்ப ஒப்படைத்தல், விமான ரூட்களை சரிப்படுத்துதல் என பல நடவடிக்கைகள் அடங்கும்.." என்றார் பிரபுல் பட்டேல்.
ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டையும் இணைத்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று கூறப்படுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.