ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் அழகிரி
சென்னை: பத்து நாள் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுகவில் வாரிசுப் போர் உக்கிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அழகிரி சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் பத்து நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அழகிரி அளித்த பேட்டிக்குப் பதிலடி தரும் வகையில், நேற்று முதல்வர் கருணாநிதியின் பேட்டி ஒன்று நக்கீரன் வார இதழில் வெளியானது. அதில், திமுக தலைவரை தனி நபர் எவரும் தேர்வு செய்ய முடியாது. எனக்கே கூட அந்த அதிகாரம் கிடையாது என்று கூறியிருந்தார் கருணாநிதி.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை திரும்பினார் அழகிரி. அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அழகிரி ஆதரவு அமைச்சர்களான தமிழரசி, பெரியகருப்பன், நடிகர் ரித்தீஷ் எம்.பி. உள்ளிட்டோர் பெரும் திரளாக சென்று வரவேற்றனர்.
நூற்றுக்கணக்கான தொண்டர்களும் திரண்டதால், விமான நிலையம் நிரம்பி வழிந்தது. அவருக்கு ஏராளமானோர் சால்வைகளும் அணிவித்தனர். பின்னர் கார் நின்றிருந்த இடம் வரை அழகிரி நடந்தே வந்தார். அவருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தபடி ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர்.