பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 28ல் தொடக்கம்

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று, தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்தினார்.
இதில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பாகவும், வேறு பல விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன்பிறகு, நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்து, மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான தேர்வுகள், ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளுக்கான முடிவுகளை, மே மாதம் 30-ந் தேதிக்குள் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி படிப்பை முடித்து, வேலையில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கு போதிய காலஅவகாசம் இல்லை என்று கூறுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் குறைகளை தீர்க்கும் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பி.டெக் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கான கவுன்சிலிங் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு, மே மாதம் 2-ந் தேதி வெளியிடப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், மே 3-ந் தேதியில் இருந்து வழங்கப்படும். விண்ணப்பங்கள், மே 29-ந் தேதி வரை அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 31-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்களுக்கு ரேண்டம் நம்பர் ஜுன் 15-ந் தேதி கொடுக்கப்படும். ரேங்க் லிஸ்ட் (தரவரிசைப்பட்டியல்), ஜுன் 18-ந் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜுன் 28-ந் தேதி தொடங்கும். கவுன்சிலிங் முடிவடையும் தேதி ஜுலை 25 ஆகும்.
திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் நோக்கம், வேலைவாய்ப்பை வழங்குவது அல்ல. கல்லூரி சென்று படிக்க முடியாதவர்கள், தாங்கள் விரும்பும் துறையில் பட்டம் பெற வாய்ப்பு வழங்குவதற்காகவே அவை செயல்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புக்காக படிப்பவர்கள், முழுநேர கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம்.
தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகள்தான் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை என்று கேட்கிறார்கள். இந்த அரசு அமைந்த பிறகு 7 இடங்களில் புதிய அரசு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பென்னாகரத்தில் கூட இப்போது புதிய கல்லூரி தொடங்கப்படவுள்ளது என்றார் பொன்முடி.
தமிழ்நாட்டில் 455 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை ஒரு லட்சம் இடங்களுக்கு வழங்கப்படும்.
இந்த வருடம் புதிதாக 50 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளதால் எப்படியும் 40 கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கல்லூரிக்கு 240 இடங்கள் வீதம் 9,600 இடங்கள் அதிகரிக்கும். இவற்றில் கவுன்சிலிங்குக்கு முதல் வருடம் என்பதால் அனைத்து இடங்களும் கவுன்சிலிங்குக்கு வர வாய்ப்பு உள்ளது. அல்லது 65 சதவீத ஒதுக்கீட்டுப்படி எப்படியும் 6 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்குக்கு வரும் என்று கருதப்படுகிறது.
எனவே இந்த வருடமும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கவுன்சிலிங் வழக்கம் போல சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே இந்த ஆண்டும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications