காலாவதி மருந்து மோசடி வழக்கு – முக்கியப் புள்ளி சரண்
சென்னை: காலாவதி மருந்தை விற்று மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியப் புள்ளியான ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் குமார் வாலாஜா கோர்ட்டில் இன்று சரணடைந்தார்..
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்ததாக மீனாட்சி சுந்தரம் என்ற முக்கிய குற்றவாளி ஏற்கனவே நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த இன்னொரு முக்கியப் புள்ளியான சஞ்சய்குமார் என்பவர் இன்று வாலாஜா கோர்ட்டில் சரணடைந்தார்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், :காலாவதியான மருந்துகளை விற்பனை செய்ததாக சஞ்சய் குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் வடமாநிலங்களில் பதுங்கி இருக்கக்கூடும் என்று கருதியதால் போலீசார் அங்கு சென்று இருக்கிறார்கள்.
இதனிடையே, இன்று வேலூர் மாவட்டம் வாலாஜா நீதிமன்றத்தில் சஞ்சய்குமார் சரண் அடைந்திருக்கிறார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரத்துடன் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த இருக்கிறோம்.
அப்போதுதான் யார் யாருக்கு காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. வேறு எங்கெங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவரும்.
இதனிடையே, மீனாட்சி சுந்தரத்தின் 8 வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. அவர் ரூ.31 கோடி வரை வங்கிகளில் ஓடி பெற்றிருக்கிறார். மேலும் அவருக்கு சொந்தமாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி, சின்மையா நகரில் உள்ள கிடங்குகளில் மேலும் விசாரணை நடத்த இருக்கிறோம்.
இந்த காலாவதியான மருந்து விற்பனையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும். இந்த வழக்கை இதுவரை சிபிசிஐடிக்கு மாற்றவில்லை. நாங்கள்தான் விசாரித்து வருகிறோம் என்றார்.
ரூ. 150 கோடி வரை வருமானம் குவித்த மீனாட்சிசுந்தரம்
இதற்கிடையே, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரம் போலீஸாரிடம் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
போலி மருந்துகளை விற்பனை செய்ததன் மூலம், ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை விற்றுமுதல் செய்ததாகவும், வருமான வரியாக மட்டும் சுமார் ரூ.45 லட்சத்துக்கும் மேல் செலுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், போலி விற்பனை மூலம் கிடைக்கும் பெரும் தொகையை கொண்டு தனது உறவினர்களுடன் சேர்ந்து, மருந்து தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ தான் திட்டமிட்டிருந்ததாகவும் மீனாட்சி சுந்தரம் விசாரணையின்போது தெரிவித்துள்ளாராம்.