பண மாலையைத் தொடர்ந்து மாயாவதிக்குக் கோவில் கட்டும் தலித் வக்கீல்!

வறுவை தலைவிரித்தாடும் புந்தல்கந்த் பகுதியின் மகோபா மாவட்டத்தில்தான் இந்த மாயாவதி கோவில் எழும்பி வருகிறது. உ.பி மாநிலத்திலேயே பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய பகுதிதான் இந்த மகோபா. மகோபா மாவட்டம் நத்புரா கிராமத்தில் இந்தக் கோவிலை கட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கோவில் கட்டுபவரான வக்கீல் கனய்ஹியா லால் என்பவர் கூறுகையில், எனக்குச் சொந்தமான நிலத்தில் தான் இந்தக் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு மாயாவதியின் சிலையை வைக்கவுள்ளோம் என்றார்.
கோவில் கட்டும் வக்கீல் லால், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரல்ல. ஆனால் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாயாவதிக்கு கடந்த மாதம் பண மாலை அணிவித்த்தை தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர். இதனால்தான் நான் மாயாவதிக்குக் கோவில் கட்ட முடிவு செய்தேன்.
மாயாவதிக்குப் பண மாலை போடுவதைக் கிண்டல் செய்தவர்கள், விமர்சித்தவர்களுக்குப் பதிலடியாக இந்தக் கோவில் அமையும். இங்கு வைக்கப்படும் மாயாவதி சிலைக்கு யார் வேண்டுமானாலும் பண மாலை போடலாம். அதை யாரும் விமர்சிக்க முடியாது.
இதே மகோபா மாவட்டத்தில் கடந்த 1970களில் இந்திரா காந்திக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்தனர். ஆனால் அதை யாரும் விமர்சிக்கவில்லை. அதேசமயம், மாயாவதி ஒரு தலித் என்பதால் இவ்வளவு சத்தம் போடுகின்றனர் என்றார்.
உயிருடன் உள்ளவர்களுக்கு கோவில் கட்டினால் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள், வக்கீல் லாலிடம் கூறியுள்ளனராம். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் உள்ளூர் தலைவர் மூலம் மாயாவதியை சந்தித்து அனுமதி பெறப் போவதாக லால் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications