முற்படுத்தப்பட்டோருக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு - ஈரோட்டில் எஸ்.வி.சேகர் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், 'அதிமுக தோல்விக்காக தீக்குளித்த தொண்டரை பார்க்க அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஈரோடு வந்துள்ளார்.
அந்த தொண்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுப்பதற்காக, பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து வந்துள்ளார்.
தீக்குளித்தவரை முட்டாள் என்று தான் நான் கூறுவேன். அவரை நம்பி மனைவி, தாய் மற்றும் குழந்தைகள், குடும்பம் இருக்கிறது. தற்கொலை என்பது முட்டாள்தனமான செயல்.
இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று லட்சம், சிறுநீரகம் அறுவை சிகிச்சைக்கு பத்து லட்சம் என மொத்தம் உடலில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன. யாருக்கும் பயன்படாமல் தீ வைத்து தற்கொலை செய்து கொள்வது மடத்தனம்.
தீக்காயம் அடைந்த அதிமுக தொண்டரை முதல்வர் காப்பீடு திட்டம் காப்பாற்றும்.
பென்னாகரம் தேர்தலில் அதிமுக டிபாஸிட் இழந்துள்ளதை மறைக்கவே ஜெயலலிதா நேரடியாக தொண்டரை பார்த்து நிதியுதவி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
அதிமுக தோல்விக்கு முக்கிய காரணம் அக்கட்சி தொண்டர்களையும், மக்களையும் விட்டு விலகி சென்று விட்டது தான்.
அதிமுக சிறப்பாக இருக்க வேண்டிய கட்சி. சீரழிய காரணம் அதன் அதிகாரம் வேறொருவர் கையில் உள்ளது தான். அடுத்த சட்டசபை தேர்தலின் போது பல இடங்களில் அதிமுக டெபாசிட் காலியாகும்.
சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் வந்துவிடும். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு, திமுகவில் இணைய உள்ளேன். முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் என்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பேன்.
முற்படுத்தப்பட்டோருக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என தமிழக முதல்வரிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். பல துறைகளில் முற்படுத்தப்பட்டோர் பின்தங்கியுள்ளனர்.
மலையும், மடுவும் சமமாக இருக்க வேண்டுமென்றால், முற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அவசியம். இதை கருணையின் அடிப்படையில் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
இதை மட்டும் கொண்டு வந்தால், எந்த வித பிரச்னையுமின்றி 40 லட்சம் ஓட்டுகள் திமுகவுக்கு அதிகம் கிடைக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications