வெயிலில் தவிக்கும் மக்களுக்காக தண்ணீர்ப் பந்தல் அமையுங்கள் – விஜயகாந்த்
சென்னை: கோடைகாலம் தொடங்கி விட்டதால் மக்கள் வசதிக்காக தண்ணீர்ப் பந்தல் அமைக்க வேண்டும் என தேமுதிகவினருக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வழக்கத்திற்கு மாறாக இப்பொழுதே வெயில் அதிகரித்துவிட்டது. இந்த கோடைகாலம் கொடுமைக் காலமாக மாறும் போல் தெரிகிறது. கோடைகாலத்தை சமாளிக்க மக்களுக்கு மின்சார வசதி இருந்தால் ஓரளவு உதவிகரமாக இருக்கும்.
ஆனால் மின்சாரம் எப்பொழுது வரும் போகுமென்று ஆண்டவனாலும் சொல்ல முடியாது. ஆனால் ஆற்காடு வீராசாமி மே மாதம் கடைசிவரை மின்வெட்டு தொடருமென்று அறிவித்துவிட்டார். மின்வாரிய தலைவரோ அவர் பங்கிற்கு இன்னும் ஓராண்டு வரை மின்பற்றாக்குறை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புறத்தில் உள்ள மக்களோ குறிப்பாக விவசாயிகள் தங்கள் பகுதியில் மின்சாரமே வரவில்லை என்று கூறி ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் தான் குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்ய முடிகிறது.
இந்த கோடைகாலத்தில் மின்வெட்டு காரணமாக குடி தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கோடை காலம் மக்களுக்கு பெரும் துன்பங்களை விளைவித்து வருகிறது. ஆண்டுதோறும் தே.மு.தி.க. சார்பில் நம்முடைய கழகத் தோழர்கள் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஆங்காங்கே தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது வழக்கம்.
அதே போல இந்தாண்டும் நமது இயக்கத்தின் சார்பில் தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து, நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம் போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை மக்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.