மாஸ்கோவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது டீன்-ஏஜ் பெண்!
மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 வயதுக்கும் குறைவான இளம்பெண் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
செசன்யா தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் ரஷ்யாவில் கடந்த திங்கள் கிழமை தற்கொலைப் படை தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோவின் மெட்ரோ ரயிலிலும் ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 50 பேர் பலியாயினர். பலர் பலத்த காயமடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய மாஸ்கோவில் உள்ள லுபியன்கா ரயில் நிலையம், பார்க் குல்டுரி மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இந்த கொடூர தாக்குதல் நடந்தன.
இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு தற்கொலைப் படைத் தாக்குதலே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை கண்டறிய ரஷ்ய புலனாய்வுக் குழு தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்கும் குறைவான இளம்பெண்கள் என தெரிய வந்திருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்க் குல்டுரி ரயில் நிலையத்தில் உடலில் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய பெண்ணின் அடையாளம் புலனாய்வு குழுவுக்கு தெரிய வந்திருப்பதாகவும், வயது கருதி தகவல்களை வெளியிட முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய பெண் 1992ம் ஆண்டில் பிறந்தவர் என்று மட்டும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு தற்கொலைப் படை தீவிரவாதியின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் புலனாய்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு பெண் தீவிரவாதியின் பெயர் அப்துல்லாவியா என்று தொடங்கும் என பல்வேறு செய்திகள் ரஷ்ய பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.
அப்துல்லாவியா எனக் குறிப்பிடப்படும் இந்த பெண்மணி, முக்கிய தாஜிஸ்தானி தீவிரவாத தலைவர் ஒருவரின் மனைவி என்றும், கடந்த டிசம்பர் மாதம் தாஜிஸ்தானி தீவரவாத தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.