ஏப். 20 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
மதுரை: வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பள்ளிகள் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 29 ஆயிரத்து 388 தொடக்கப் பள்ளிகள், 8 ஆயிரத்து 377 நடுநிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 425 உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆயிர்த்து 50 மேல்நிலைப் பள்ளிகள், 3 ஆயிரத்து 600 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு கோடியே 25 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. பத்தாம் வகுப்பு, மெட்ரிக் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த இரு பிரிவு வகுப்பு மாணவர்கள் தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு நடத்தி விடுமுறை அறிவிக்க வேண்டும்.
பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திட்டமிட்டு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசி வேலை நாள், ஏப்ரல் 19 என்று திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த வேலை நாட்களுக்குள் தேர்வுகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்து ஜூன் முதல் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.