பாக்தாத் நகரில் தொடர் குண்டுவெடிப்பு - தூதரகங்களுக்கு குறி!
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிகிறது.
பாக்தாத்தில் உள்ள ஈரானிய தூதரக அலுவகத்துத்து அருகில் ஒரு குண்டுவெடிப்பும், பாக்தாத்தின் மேற்கு - மத்திய பகுதியில் மன்சௌர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜெர்மன் தூதரகத்துக்கு அருகில் ஒரு குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளன.
மன்சௌர் மாவட்டத்தில் மற்றொரு இடத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் தெரிவித்த உடனடி தகவலின் படி, இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாக்தாக் அருகே தெற்கு பகுதியில் அமைந்துள்ள சன்னி முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிகளுடன் புகுந்து 25க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தது.
ராணுவ உடைகளை அணிந்து கொண்டு கிராமத்து வீடுகளுக்குள் புகுந்த இந்த கும்பல் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுத்தள்ளியதில் பெண்கள், குழந்தைகள் கூட பலியானார்கள்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்புக்கு எதிரான நிலை எடுத்த சன்னி பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த காட்டுமிராண்டித் தனமான வன்முறை நிகழந்த 24 மணி நேரத்தில் பாக்தாத் நகரம் தொடர் குண்டுவெடிப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications