கோயில் திருவிழாவில் தகராறு - சிவகிரியில் பரபரப்பு – போலீஸ் மீது கல்வீச்சு
சிவகிரி: சிவகிரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் மீது
கல்வீசப்பட்டது. இதை தொடர்ந்து சாலை மறியலும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சிவகிரி அண்ணாநகர் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கொடை விழா நடத்தும் தரப்பினர் இன்னொரு சமூகம் வசிக்கும் தெரு வழியாக நேற்று ஊர்வலம் வந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த சில இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்த பெண்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதில் அம்பேத்கார் தெருவை சேர்ந்த கவுசிகன் மகன் பிரபாகரன் என்பவரை ஊர்வலத்தில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த பிரபாகரன் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என போலீசிடம் வற்புறுத்தினர்.
இரு சமூகத்தினரிடம் மோதல் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று காலை வாலிபரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என ஒரு பிரிவு மக்கள் மதுரை செல்லும் சாலையில் குவிந்தனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்த நிலையில் கூட்டத்தில் நின்ற சிலர் போலீசை நோக்கி கல்வீசி தாக்கினர். இதையடுத்து கல் வீசிய 2 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி கொல்லம்-மதுரை நெடுஞ்சாலையில் பெண்களும், ஆண்களும் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து புளிங்குடி டிஎஸ்பி பாஸ்கரன் 2 பேரையும் விடுவித்ததுடன் அவர்கள் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினார்.
தொடர்ந்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் தாசில்தார் ராஜராம் முன்னிலையில் இரு தரப்பை சேர்ந்த சமுதாய நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
--
M K Azhagiri distributes RITZ icon award