அடுத்த மூன்றாண்டில் நக்சல்கள் ஒழித்துக் கட்டப்படுவார்கள் – ப.சிதம்பரம் உறுதி
சென்னை: இந்தியாவில் நக்சலைட் தீவிரவாதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு ஆவடியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். மேற்குவங்கத்தில் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் தமிழகம் வந்த அவர், கூட்டத்தில் பேசியதாவது:
2010-11ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை ரூ.11 லட்சத்து 8 ஆயிரத்து 740 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு அறிவித்த எல்லா திட்டங்களுக்கும் பணம் உள்ளது. எல்லாமே வரிப்பணம் என்பதை சொல்லத் தேவையில்லை.
இதில் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் செலவிடப்படுகிறது. பக்கத்து நாடுகள் பகை பாராட்டாமல், நட்பு நாடாக இருந்துவிட்டால் இவ்வளவு செலவு செய்ய வேண்டிய அவசியமிருக்காது.
அடுத்தபடியாக உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் ரூ.40 கோடி செலவழிக்கப்படுகிறது. நக்சலைட்டுகள் தான் தற்போது நமக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள்.
நக்சலைட் தீவிரவாதிகளை முதலிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். கடந்த 12 ஆண்டிகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ள வில்லை.
தற்போது இந்தியாவிற்கு முதல் எதிரி என்றால் அது நக்சலைட்டுகள் தான். வன்முறை அணுகுமுறைக்கு இந்தியாவில் இடமே கிடையாது.
நக்சல்கள், அவர்கள் சொல்லிக்கொள்வது போல ஏழைகளுக்கு சாதகமானவர்கள் அல்ல. அவர்கள் கோழைகள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் நக்சலைட் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும். நாட்டின் முதல் எதிரியாக நக்சலைட்டுகள் தான் உள்ளனர் என்றார்.