மகளிர் மசோதா – அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது
ராஜ்யசபாவில் ஒரு வ்ழியாக மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டாலும் கூட அடுத்து லோக்சபாவை அது தாண்டியாக வேண்டும். ஆனால் அது மிகக் கடுமையானதாக கருதப்படுவதால் அதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தத்தமது நிலையை தெரிவித்தனர். ஆனால் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை.
கூட்டம் குறித்து பின்னர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவிக்கையில், இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பிரதமரிடம் கொண்டு செல்வேன். மீண்டும் ஒரு கூட்டம் தேவைப்பட்டால் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மகளிர் மசோதா தொடர்பாக பிடிவாதமான நிலையை மேற்கொண்டு வரும் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் இன்றைய கூட்டத்திலும் தங்களது நிலையை உறுதியுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இவர்களை சந்தித்துப் பேசப் போவதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து மமதா கூறுகையில், இந்த மசோதா எப்படியாவது தாக்கல் செய்யப்பட்டாக வேண்டும். நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
இதற்காக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார்.
கூட்டத்தல் பங்கேற்ற மூன்று தலைவர்களும் இறுகிய முகத்துடன் காணப்பட்டனர். இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இக்கூட்டம் குறித்து முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை ஏற்கவே முடியாது. அதை கடுமையாக எதிர்ப்போம். முஸ்லீம்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கண்டிப்பாக மகளிர் மசோதாவில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். இந்த நிலையில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை.
நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
தற்போதைய வடிவில் மகளிர் மசோதாவை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தொடர்ந்தும் எதிர்ப்போம் என்றனர் அவர்கள்.