தங்கு தடையின்றி செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாம்கள் – உள்துறை அமைச்சகம்
டெல்லி: பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகள், கட்டமைப்புகள் அப்படியேதான் உள்ளன. தொடர்ந்து அங்கிருந்தபடி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவிக் கொண்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-10ம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தீவிரவாதிகளின் ஊடுறுவலில் எந்த மாற்றமும், குறைவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவியோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்ந்து தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. அவற்றை மூடும் முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எல்லைக்கு அப்பாலிருந்து வரும் வன்முறைகளையும், தீவிரவாதிகளால் ஏற்படும் சவால்களையும் சமாளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுறுவல் செயல்கள் குறைந்த வண்ணம் இருந்தன. ஆனால் 2009ல் இது அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டை விட 2009ம் ஆண்டு இது அதிகரித்திருந்த்து.
2009ம் ஆண்டில் 485 ஊடுறுவல் முயற்சிகளை தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.