'கட்' அடித்த டாக்டர்களை சுற்றிவளைத்த விடுதலைச் சிறுத்தைகள்
காட்பாடி: பணி நேரத்தின்போது வேலையைச் செய்யாமல், சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 3 அரசு டாக்டர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் பிடித்து காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது.
இங்கு பணிபுரியும் டாக்டர்களில் சிலர் தினமும் சென்னையில் இருந்து வந்து செல்கின்றனர்.
அப்படி வருபவர்களில் சிலர் பணிநேரம் முடிவடையும் முன்பே மருத்துவமனையில் இருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் நோயாளிகள் பலர் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன.
இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு மூட்டு பிரிவு டாக்டர் அமர்நாத், தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தனலட்சுமி, பொது மருத்துவர் டாக்டர் ராமசுந்தரம் ஆகியோர் நேற்று காலை 11.15 மணிக்கு சென்னை செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி ஜே.ஜி.குட்டி, தனது கட்சி நிர்வாகிகளுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த அரசு டாக்டர்களை அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் டாக்டர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசு டாக்டர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரி சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் வந்து விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணியின்போது வீட்டிற்கு செல்லும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து விடுதலை சிறுத்தை அமைப்பினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications