சென்னைக்கு தேசியக் கல்லூரி தேவையில்லை – துரைமுருகன்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் தேசிய சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் படிப்புக்கு நிகரான பட்டப் படிப்பு உள்ளது. எனவே தனியாக தேசியக் கல்லூரி தொடங்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார் மாநில சட்ட அமைச்சர் துரைமுருகன்.
தமிழகத்தில் தேசிய சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா என சட்டசபையில் திருப்பத்தூர் பாமக எம்எல்ஏ தி.க.ராஜா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், 'இங்குள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற சட்டப்படிப்பு உள்ளது. இது தேசிய சட்டக் கல்லூரி அளிக்கும் கல்விக்கு நிகரானது.
ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் படிப்புக்கு ரூ.40 ஆயிரம் தான் கட்டணம். வெளிநாட்டிலும் இந்த கல்விக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் தேசிய சட்டக் கல்லூரியில் படிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.
தேசிய சட்டக் கல்லூரியை தொடங்கினால், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். அதில் சேரும் நம் மாநில மாணவர்களின் சேர்க்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.
அதிக பணம் செலவு செய்து இங்கு உருவாகும் தேசிய சட்டக் கல்லூரியால் மண்ணின் மைந்தர்களுக்கு பயனில்லாமல் போக வேண்டுமா?
மற்ற பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக கவர்னர் இருப்பதுபோல், தேசிய சட்டக் கல்லூரிக்கு வேந்தராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார். எனவே இது நமக்கு அவசியம் இல்லை' என்றார்.
சென்னை சட்டக்கல்லூரி மோதல் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,
'சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் கமிஷன், அந்தக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
இதே கருத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் கூறி இருக்கிறார். கமிஷனின் கருத்து, அரசின் பரிசீலனையில் உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications