உயர்நீதிமன்ற மோதலுக்கு முன்னாள் கமிஷனர் ராதாகிருஷ்ணனே பொறுப்பு: ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீஸ் - வக்கீல் மோதல் சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனே முழு பொறுப்பாவார் என்று போலீஸ் அதிகாரி ஏ.கே.விசுவநாதன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காவல் துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், அப்போதைய சென்னை காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணி, துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டனர்.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கூடுதல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில், 'உயர்நீதிமன்றத்திற்குள் சம்பவம் நடந்த அன்று அங்கு இருந்த பி4 போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்காவை நான் பார்க்கவோ, பேசவோ இல்லை.
ஆனால், அவர் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகே சட்டவிரோதமாக கூடியிருந்த கும்பலை கலைக்க தடியடி நடத்தியதாக கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
நீதிமன்றத்துக்குள் சட்டவிரோதமாக கூடியிருப்பது பற்றியோ, தடியடி நடத்த வேண்டும் என்றோ நான் உத்தரவிடவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் வக்கீல்களை நீதிமன்றத்தில் உள்ள இந்தியன் வங்கி வரை விரட்டிச்சென்றனர்.
அப்போது போலீஸ் படையை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பலமுறை கேட்டுக்கொண்டேன்.
ஆனால், எனது வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை. உயர் அதிகாரி என்ற முறையில் அவரை நம்பி அவரது உத்தரவை மட்டும் செயல்படுத்தினேன்.
ஆணையர் ராதாகிருஷ்ணன் கூடுதல் படையுடன் வந்து தடியடி நடத்தியதால் தான் நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
உண்மையில், போலீஸ் படையை வாபஸ் பெறுவதற்கு ராதாகிருஷ்ணன் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் வருகைக்கு பிறகே நிலைமை மேலும் மோசமானது.
உயர்நீதிமன்ற சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரிகள் ராமசுப்பிரமணி, பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் பொறுப்பில்லை. ராதாகிருஷ்ணன் மட்டுமே முழு பொறுப்பாவார்.
எனவே, எனது மனுவை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு அளித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications