தவறான தகவல் கொடுத்த்தாக அதிமுக எம்.எல்.ஏ. விஜயக்குமார் சஸ்பெண்ட்
சென்னை: சட்டசபைக்குத் தவறான தகவலைக் கொடுத்ததற்காக கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. விஜயக்குமார் ஒரு நாள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வெங்கடேசப் பெருமாள் கோவில் திருப்பணிகள் குறித்து சட்டசபையில் குற்றம் சாட்டிப் பேசியிருந்தார் விஜயக்குமார். ஆனால் அவர் கூறியது போல பணிகள் ஏதும் நடக்காமல் இல்லை. பணிகள் நடந்து வருகின்றன. அவைக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளார் விஜயக்குமார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார்.
இன்று இந்த விவகாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் கருணாநிதி தனது கருத்தைத் தெரிவிக்கையில், அதிமுக உறுப்பினர் தெரியாமல் சொன்னாரா? தெரிந்தே சொன்னாரா? என்பதை ஆய்வு செய்து, தெரியாமல்தான் கூறினேன் என்று அவர் குறிப்பிட்டால் இந்தப் பிரச்சனையை இத்துடன் விட்டுவிடலாம் என்றார்.
தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் விஜயகுமாரை கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு விஜயக்குமார் மறுத்து விட்டார்.
இதையடுத்து இன்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன், வருகிற 12ம் தேதியன்று அவை நடவடிக்கைகளில் விஜயக்குமார் கலந்து கொள்ள தடை விதிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 12ம் தேதி அவை நடவடிக்கைகளில் விஜயக்குமார் கலந்து கொள்ள தடை விதித்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.