கிர்கிஸ்தானில் மக்கள் புரட்சி – அமைச்சர் அடித்துக் கொலை – அதிபர் ஓட்டம்
பிஷ்கெக்: முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பெரும் புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்துள்ளனர். கலவரம் வெடித்ததில், அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிபர் குர்மான்பெக் பாகியேவ் தப்பி ஓடி விட்டார்.
அரசுக் கட்ட்டங்கள், அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். போலீஸார் நடத்திய கண்ணீர்ப் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆசியாவில் உள்ள சிறிய நாடுதான் கிர்கிஸ்தான். சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள நாடு.
இங்கு அதிபராக உள்ள பாகியேவ் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கட்சிகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஆட்சியைப் பிடித்தவர். தற்போது அவரது ஆட்சியும் அதேபோன்ற ஒரு போராட்டத்தால் அகன்றுள்ளது.
இன்று காலை தலைநகர் பிஷ்கெக்கில் பெரும் கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசு அலுவலகங்களை சூறையாடினர். போலீஸார் அவர்களை அடக்க முயன்றனர். இதில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்தக் கலவரத்தில், கிர்கிஸ்தான் உள்நாட்டு அமைச்சர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிபர் பாகியேவ் தப்பி ஓடி விட்டார். அவர் அண்டை நாடு ஒன்றுக்குத் தப்பிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் பிஷ்கெக் உள்பட நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் இதுவரை 68 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஆட்சியை எதிர்க்கட்சியினர் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு கட்டடங்கள், டிவி, வானொலி உள்ளிட்டவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும மலிந்து விட்ட ஊழலே இதற்குக் காரணம் என்றும், ரஷ்யாதான் இதைத் தூண்டி விட்டுள்ளதாக இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. ஆனால் கிர்கிஸ்தான் கலவரத்திற்கும், ரஷ்யாவுக்கும சம்பந்தம் இல்லை என்று ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்றும் புடின் கூறியுள்ளார்.
கிர்கிஸ்தான் கலவரம் குறித்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐநா ஆகியவை கவலை தெரிவித்துள்ளன.