சென்னையில் பஸ் ஊழியர்களுடன் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னை : சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு பஸ் ஊழியர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பின்னர் மாணவர்கள், சட்டக் கல்லூரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு கூடியது.
பிராட்வே பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர பஸ் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஆசாமி ஒருவர் திடீரென்று ஓட்டி சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர், கண்டக்டர் மீது மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாகம் இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்தது. இதனால் பஸ் ஊழியர்கள் கொதிப்படைந்த நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் 56-டி மாநகர பஸ் பிராட்வே பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பஸ்சை ஓட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு டிரைவர் செல்வராஜ் கடும் ஆட்சேபனை தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கும், மாணவருக்க்கும் இடையே மோதல் மூண்டது. மாணவருக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்தனர். அதேபோல செல்வராஜுக்கு ஆதரவாக பஸ் ஊழியர்களும் திரண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பஸ் நிலையத்திற்குள் வைத்து கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் படையுடன் திரண்டு வந்தனர். மோதலுக்குக் காரணமான சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் டிரைவர் செல்வராஜ் ஆகியோரை சட்டக் கல்லூரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட புகார்களைப் பெற்றுக் கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அமைதியாக கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர்.
ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டனர். உடனடியாக டிரைவர் செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications