மாவோயிட்ஸ் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டிஸ்கரில் பந்த்
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள், தான்டேவாடா வனப்பகுதியில் நிகழ்த்திய கொடூரப் படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டிஸ்கரில் இன்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து சட்டிஸ்கரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ராய்ப்பூரில் இயல்பு நிலை முற்றிலும் பாதித்துள்ளது. 2வது பெரிய நகரான பிலாஸ்பூர், தொழில் நகரங்களான கொர்பா, ராய்கார், பிலாய் ஆகிய நகரங்களிலும் இயல்பு நிலை பாதித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பிராந்தியத்திலும் தான்டேவாடா, பீஜப்பூர், நாராயண்பூர், பஸ்தர், கங்கர் ஆகிய நகரங்களிலும் பந்த் போராட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தனேந்திரா சாஹு கூறுகையில், மாநில பாஜக அரசின் தவறான கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது.
பாஜக அரசின் தவறான போக்கின் காரணமாகவே 76 ஜவான்களின் உயிர் பறிபோயுள்ளது என்றார்.
பந்த் போராட்டத்திற்கு சட்டிஸ்கர் தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட ஐந்து முக்கிய வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications