டிஜிபியாக லத்திகா சரணை நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: டிஜிபி பதவியில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டதற்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த விட்டது.
தமிழக டிஜிபியாக இருந்து வந்த கே.பி. ஜெயின் சமீபத்தில் விடுப்பில் போனார். இதையடுத்து அவரது இடத்தில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதை எதிர்த்து தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி ஆர்.நடராஜ் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில்,
1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 16-ந் தேதி ஐ.பி.எஸ். தேர்வில் நான் வெற்றி பெற்றேன். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி டி.ஜி.பி. ஆனேன். லத்திகாசரண் 1976-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ஐ.பி.எஸ். தேர்வு பெற்றார். அவர் 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி பதவி உயர்வு பெற்று டி.ஜி.பி. ஆனார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த கே.பி.ஜெயின் விடுமுறையில் சென்றுவிட்டார். அந்த பதவியில் லத்திகாசரணை நியமித்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தேன். இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, முதல் 3 மூத்த டி.ஜி.பி.க்கள் பட்டியலை தயாரித்து, அதில் ஒருவரைதான் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்க வேண்டும். அதன்படி பட்டியல் தயாரிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தெரிவித்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் லத்திகாசரணை போலீஸ் டி.ஜி.பி.யாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
லத்திகாசரண் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, நான் மனுதாக்கல் செய்ததாக கருதி அதனை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது. நான் அவரது நியமனத்தை எதிர்க்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தெரிவித்த விதிமுறைகள்படி முதல் 3 மூத்த டி.ஜி.பி.க்கள் பட்டியலை தயாரிக்காமல் டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத்தான் மனுதாக்கல் செய்திருந்தேன்.
மூத்த டி.ஜி.பி.க்கள் பட்டியலை தயாரித்தால், அதில், கே.பி.ஜெயின், பாலச்சந்திரன், ஆர்.நடராஜ், விஜயகுமார் ஆகியோர் இடம் பெறுவர். அவர்களுக்கு பிறகுதான் லத்திகாசரண் வருகிறார். எனவே முதல் 3 மூத்த டி.ஜி.பி.க்கள் பட்டியலில் லத்திகாசரண் இடம்பெறவில்லை.
பாலச்சந்திரன், நான் (நடராஜ்), விஜயகுமார் ஆகியோர்தான் இடம் பெற்றுள்ளோம். எங்கள் 3 பேரில் ஒருவரை தேர்வு செய்து டி.ஜி.பி.யாக நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி.முருகேசன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சோமையாஜி கூறுகையில், டி.ஜி.பி.க்களின் பணிமூப்பு பட்டியலில் லத்திகாசரண் 7-வது இடத்திலும், மனுதாரர் நடராஜ் 3-வது இடத்திலும் உள்ளனர். பல்வேறு மாற்றங்களை கருத்தில் கொண்டு டி.ஜி.பி. பணி நியமனத்தில் சில விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ளது. அதில், ஒரு விதிமுறை கூறுவது என்னவென்றால், மூத்த டி.ஜி.பி.க்கள் பட்டியல் தயாரித்து, அதில் முதல் 3 மூத்த அதிகாரிகளில் ஒருவரைதான் டி.ஜி.பி.யாக நியமிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
லத்திகாசரண் பணி நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை. அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
மனுதாரரின் வாதங்களை பரிசீலிக்காமல், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மட்டும் கோடிட்டு காட்டி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விடுப்பு காலியிடத்தில் லத்திகாசரண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை வழக்கமான டி.ஜி.பி.யாக நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வக்கீல் சோமையாஜி கேட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சங்கரன் வாதாடுகையில், பணி மாற்றம் செய்து லத்திகாசரண் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த அதிகாரியை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் அரசின் கருத்தை தெரிந்து கோர்ட்டில் தெரிவிக்க அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் பார்க்கும்போது, மனுதாரரின் மனுவில் வலு இருப்பதாகவும், திருப்தி அடைவதாகவும் நாங்கள் கருதுகிறோம். இந்த மாத இறுதியில் கே.பி.ஜெயின் ஓய்வு பெறப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது லத்திகாசரண் டி.ஜி.பி. பதவியில் இருப்பதால் அவரது நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. லத்திகாசரண் நியமனத்துக்கு தடை விதிக்க விரும்பவில்லை என்றாலும், அவர் பதவியில் நீடிப்பது இந்த வழக்கின் மேல் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றனர்.
வழக்கு ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications