இந்தியா - சீனா பிரதமர்களுக்கு இடையே இடையே 'ஹாட்லைன்' வசதி
பெய்ஜிங்: இந்திய பிரதமரும், சீன பிரதமரும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் 'ஹாட்லைன்' தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும், மன்மோகன் சிங்கும் ரஷியாவில் சந்தித்துக் கொண்டபோது 'ஹாட்லைன்' சேவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு முறைப் பயணமாக சீனா சென்றிருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அந்நாட்டு இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற முதல்சுற்றுப் பேச்சுக்களின் போது, இருநாட்டுப் பிரதமர்களுக்கு இடையேயான நேரடித் தொலைபேசி வசதியை அமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் எஸ்.எம்.கிருஷ்ணாவும், சீனா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யாங் சியேச்சியும் கையெழுத்திட்டனர்.