கைலி அணிந்து உலா வர ஷார்ஜாவில் திடீர் தடை

கோடானுகோடி இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று லுங்கி எனப்படும் கைலி ஆகும். வீட்டில் ஹாயாக இருக்கும்போது இந்த வசதியான உடையை அணிவது தென்னிந்தியர்களின் பழக்கமாகும். குறிப்பாக வெயில் காலத்தில் மிகவும் சவுகரியமான உடை இது.
ஆனால் இந்த பாரம்பரிய உடைக்கு ஷார்ஜாவில் தடை விதித்து விட்டனர். கால்கள் வெளியில் தெரியும் வகையில் லுங்கிகளை அணிவது ஆபாசமாக இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் போலீஸ் தரப்பில் லுங்கிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு லுங்கி அணிந்து வெளியில் நடமாடிய ஆசியர்கள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் பொது இடங்களில் இதுபோன்ற ஆபாசமான உடைகளை அணியக் கூடாது என்று போலீஸார் கூறியுள்ளனர்.
இந்த திடீர் தடைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களிடையே கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது. எப்போதாவதுதான் லுங்கி அணிந்து நடமாடுகிறோம். அதற்குத் தடை விதித்தால் எப்படி என்று அவர்கள் குமுறியுள்ளனர்.
இதுகுறித்து துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார் கூறுகையில், வீட்டுக்கு வெளியே நான் எப்போதும் லுங்கி அணிவதில்லை. அணியவும் மாட்டேன். ஆனால் லுங்கியை முறையாக, உடல் தெரியாத அளவுக்கு அணியும்போது அதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. லுங்கி கிழிந்து, உடல் பாகங்கள் வெளியில் தெரியும் வகையில் அணிந்தால் தவறு என்று கூறலாம். ஆனால் முறையாக தைக்கப்பட்ட லுங்கியை அணிவதை தடுப்பது சரியல்ல என்றார்.
இதுகுறித்து ஷார்ஜாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகரீகமான உடை அணிவது தொடர்பான சட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ஜாவில் வந்து விட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்த்த் தடை என்றார்.
பொது இடங்களில் நாகரீகமான முறையில் உடைகள் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள் தவிர பாகிஸ்தான், மியான்மர், தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் லுங்கிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications