3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது - 9 நிறுவனங்கள் பங்கேற்பு
டெல்லி: மூன்றாம் தலைமுறை மொபைல் சேவைகளை வழங்கும் 3ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது.
இந்திய மொபைல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான இந்த ஏலத்தின் மூலம், அரசுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இ-ஆக்ஷன்' எனப்படும் மின்னணு முறையில் இன்று காலை 9 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது. தேசிய அளவில் 22 மண்டலங்களுக்கு ஏலம் நடக்கிறது.
ஏலத்தில் முன்வைக்கப்படும் 3 முதல் நான்கு ஸ்லாட்டுகளுக்கு ஏர்டெல்லின் பாரதி, வோடாபோன், டாடா, ரிலையன்ஸ், ஏர்செல், ஐடியா ஆகியவை உட்பட ஒன்பது நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
22 மண்டலங்கள் அனைத்திற்கும் அரசு தரப்பில் அடிப்படை விலையாக 3ஜி அலைவரிசைக்கு ரூ.3,500 கோடியும், பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கு ரூ.1,750 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3ஜி அலைவரிசைக்கான ஏலம் அடுத்த மூன்று வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சமயத்தில் எல்லா மண்டலங்களுக்கும் உயர்ந்தபட்ச விலை கேட்கப்படும் போது ஏலம் முடிவுக்கு வரும்.
அதுவரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7.30 வரை ஏலப்பணிகள் நடக்கும் என்று 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகளுக்கான தலைவர் சஞ்சய் பாண்டார்கர் தெரிவித்தார்.
3ஜி ஏலம் முடிந்த பின்னர் இரண்டு நாட்கள் கழித்து பிராண்பேண்ட ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் நடத்தப்படும்.
ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அகலக் கற்றை வழங்கப்படும். இந்தாண்டு ஆண்டு இறுதியில் 3ஜி மொபைல் சேவைகளின் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications