இன்று இரவு நடைபெறுகிறது சானியா, சோயப் மாலிக் திருமணம்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகியோருக்கு இடையே ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த்து. இடையில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் ஏற்பட்டு சமீபத்தில்தான் அனைத்தும் சரியாகின.
இந்த நிலையில், திருமணத்திற்காக சோயப் மாலிக்கின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். திருமண ஏற்பாடுகளும் களை கட்டியிருந்தன.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திருமணம் நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு சானியா மிர்ஸாவின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாம். ஏப்ரல் 15ம் தேதி ஹோட்டல் தாஜ் கிருஷ்ணாவில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம்.
இதே ஹோட்டலில்தான் கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சானியாவுக்கும், சோரப் மிர்ஸாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை காஜி அகமதுல்லா பாஷா நடத்தி வைக்கிறார்.
திருமணத்திற்காக சோயப்பின் தாயார் சுல்தானா பரூக், சகோதரர் அதில் மாலிக், சகோதரிகள் ஷாஸியா இம்ரான், சதாப் இம்ரான், உறவினர்கள் மமூன் இம்ரான், ஜைனப் இம்ரான் சோயப் ஆகியோர் ஹைதராபாத் வந்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் 2 நாட்கள் கழித்து சோயப், சானியா மிர்ஸா உள்ளிட்டோர் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.












Click it and Unblock the Notifications