தஞ்சாவூர்: டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டம்- தடியடி – பெரும் அமளி

ஒரத்தநாடு அருகே வடசேரி எனும் கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலுவுக்கு சொந்தமான எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சம்பந்தம் இல்லாமல் ஊருக்குள் வெளியூர் கார்கள் நிறைய வந்தன. இதனால் மக்கள் ஆத்திரமடைந்தனர். அடியாட்களை அனுப்ப வைத்திருப்பதாக சந்தேகமடைந்த அவர்கள், அந்தக் கார்களில் வந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி போராட்டத்தில் குதித்தனர்.
போலீஸாரிடமும் முறையிட்டனர். ஆனால் போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அந்தக் கார்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும், அங்கு வந்த கோட்டாட்சியர் கருணாகரனையும் பொதுமக்கள் தாக்கினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் சரமாரியாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
நிலைமை தொடர்ந்து பதட்டமாக இருப்பதால் அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications