பி.டி.தினகரனை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வக்கீல்கள் எதிர்ப்பு
காங்டாக்: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சர்ச்சைக்குரிய பி.டி.தினகரனை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற அங்குள்ள வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய பி.டி.தினகரனை விடுப்பில் போகுமாறு உச்சநீதிமன்ற காலேஜியம் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவரை மாற்றியுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் தினகரனை தங்கள் தலையில் கட்டுவதா என்று சிக்கிம் வக்கீல்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிக்கிம் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பி.டி.தினகரன் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தால் பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிக்கிம் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜ் பிரதான் கூறுகையில், அவர் மீது ஊழல் புகார்கள் உள்ளன. அது தவறு என்று நிரூபிக்கப்படும் வரையில் அவர் கறை படிந்த நீதிபதிதான். அப்படி ஒரு நீதிபதியை எங்களால் ஏற்க முடியாது. எனவே அவரை ஏற்க மாட்டோம்.
எங்களது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், எங்களது எதிர்ப்பைப் புறக்கணித்து பி.டி.தினகரனை தலைமை நீதிபதியாக நியமித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications