திராவிடக் கட்சிகளுடன் நாம் தமிழர் கூட்டணி அமைக்காது - சீமான் உறுதி
தஞ்சாவூர்: எக்காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என 'நாம் தமி்ழர்' இயக்க ஒருங்கிணைப்பாளரும், சினிமா இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இதுபற்றி நிருபர்களிடம் சீமான் கூறுகையில், 'நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் தமிழின எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் நடைபெறுகிறது. இது தமிழர்களுக்கான அரசியல் கட்சி.
தேசியம், திராவிடம் என்ற பெயர்களில் தான் இது வரை தமிழகத்தில் கட்சிகள் உள்ளன. தமிழ் இனத்திற்கு என்று தனியாக ஒரு அரசியல் கட்சி இல்லை. அதனால் தமிழனுக்காக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இலங்கை கடல் படை அராஜரகத்தால் தினசரி பல நூறு தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வேதனையை அனுபவிக்கின்றனர். இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக, மத்திய,மாநில அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இலங்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க கூட மத்திய மாநில அரசுகள் முன் வரவில்லை.
இலங்கை அரசு போர்க் குற்றம் செய்துள்ளதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டுகின்றது. ஆனால், இந்தியா மெளனம் காக்கின்றது.
நாம் தமிழர் அரசியல் கட்சியின் கொடி அறிமுக விழா தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
நாங்கள் வசதியாக வாழ கட்சி துவங்கவில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அப்படியொரு நிலை ஏற்பட்டால், கட்சியைக் கலைத்துவிட்டு திரைத்துறைக்குச் சென்று விடுவேன்.
தமிழின அமைப்புகள் விரும்பினால், அவர்களைத் தேர்தலில் சேர்த்துக் கொள்வோம்.
கட்சி துவங்கிய பின்பு ஊராகச் சென்று இளைஞர்களிடம் தமிழின உணர்வுகளைப் பரப்புவோம். அரசியல் வகுப்புகள் நடத்தி, இளைஞர்களை வழி நடத்துவோம்.
பெரியார், பூலித்தேவன், ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தமினத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களில் படிப்பகங்களைத் தொடங்குவோம்.
உடல் பயிற்சிக் கூடங்கள் அமைத்து, இளைஞர்களைத் தனித்திறன் மிக்கவர்களாக உருவாக்குவோம். மது, புகையிலை போன்ற தீயசெயல்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்போம்' என்றார்.












Click it and Unblock the Notifications