ராஜினாமா குறித்து பேச விரும்பவில்லை: அமைச்சர் ப.சிதம்பரம்
புதுச்சேரி: பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன் என்பது முடிந்துபோன விவகாரம். அதுபற்றி இனி பேச விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சட்டீஸ்கரின் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முடிவெடுத்தார்.
ஆனால், சிதம்பரத்தின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் ஏற்க முடியாது எனக் கூறிவிட்டார்.
சிதம்பரம் இன்று புதுச்சேரி வந்திருந்த போது இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சிதம்பரம், 'நக்சல் தாக்குதலில் எனது தலைமையின் கீழ் இருந்த 75 வீரர்கள் உயரிழந்து விட்டனர்.
சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர்கள் பறிபோனதற்கு உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்யலாமா என முடிவு செய்தேன்.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தீர்க்கமாகவும் தெரிவித்தேன். ஆனால் அதை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார்.
இப்போது அது முடிந்து போன விவகாரம். அதைப்பற்றி நான் மீண்டும் பேச விரும்பவில்லை.
நக்சல் தாக்குதலுக்கு நான் முழு பொறுப்பேற்றேன் என்பதற்காக, இதில் மாநில அரசுகளுக்கு எந்த விதமான பொறுப்பும் கிடையாது என்பது அர்த்தமில்லை.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கும் பங்குண்டு. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா மாநில அரசும் இதை ஒப்புக்கொண்டு தான் செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன்' என்றார்.